Friday, June 22, 2012

vijay special


விஜயின் வாழ்க்கை கில்லி பட திரைக்கதை போல அத்தனை வேகமானதாகத்தான் பலராலும் நம்பப்படுகிறது. சொல்லப்படுகிறது. முதல் பத்தியில் சொன்னதைப் போல அது இலகுவானதா என்றால் நிச்சயம் இல்லை. விஜய் முதலில் நடிக்க வேண்டும் என்ற போது அவர் வீட்டிலே எதிர்ப்புதான் பதிலாய் வந்தது. தன் நண்பர்களிடத்தில் சொல்லியிருந்தாலும் கிண்டலும் கேலியும்தான் செய்திருப்பார்கள். அப்போது இருந்த விஜயின் தோற்றம் அப்படி. மட்டுமில்லாமல் சினிமாவில் நுழைவதற்கான ட்ரேட் மார்க் தகுதிகளாக வாரிசுகள் உருவாக்கி வைத்திருக்கும் குதிரையேற்றம், சண்டை பயிற்சி, நடனம் என எந்த முன்னேற்பாடுகளும் அவர் செய்யவில்லை. சினிமாவில் நுழைய அவர் செய்த அதிகபட்ச முயற்சியே வீட்டில் சொல்லாமல் உதயம் தியேட்டருக்கு சென்று அண்ணாமலை படம் பார்த்ததுதான். அதற்குள் அவரைத் தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கே இழுத்து செல்லப்பட்டார். அப்போதிலிருந்து இப்போது வரை பெரிதாய் எதுவும் முயற்சி செய்யவில்லையே என்று விஜயை சீண்டும் எஸ்.எம்.எஸ்கள் வரலாம். ஆனால் உண்மை அதுதானா?

விஜயின் முதல் படம் தோல்வி. இரண்டாவது பட படப்பிடிப்பில் ஒருவர் சொன்னாராம்” இவனையெல்லாம் யாருய்யா நடிக்க கூப்பிட்டது? சண்டையும் வரல டான்ஸூம் வரல” . உண்மைதான்.அப்போது விஜய்க்கு அந்த இரண்டுமே சரியாக வரவில்லை. சொல்லப் போனால் அப்போது இருந்த விஜய்க்கு எதுவுமே சரியா வரவில்லை. அப்போதுதான் முதலில் நடன வகுப்புக்கும், சண்டை பயிற்சிக்கும் சென்றார். இன்று விஜயின் ப்ளஸ்களில் முக்கியமானவையாக இருப்பது அவை இரண்டும்தான். எந்த இரண்டு விஷயங்களுக்கு அவர் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படாரோ, அதில்தான் அவர் இன்று இணையற்ற நாயகனாக விளங்குகிறார். மீனா, ரோஜா போன்று அவருடன் நடிக்க மாட்டேன் என்று ஒதுக்கிய பலர் அவருடன் ஒரு பாடலில் மட்டும் ஆடியது எல்லாம் பழைய கதை. இந்திய அளவில் சிறந்த டேன்சர் என்று ஷில்பா ஷெட்டியிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன மூவரில் ஒருவர்… விஜய். இதற்கும் அவர் இயக்குனர் மகனாக பிறந்ததுதான் காரணம் என்போர். ப்ளீஸ். இது உங்களுக்கு அல்ல.

நடிக்க வந்தபின் நடிக்காமல் நன்றாக ஆடினார், பாடினார், அடித்தார் என்பது சப்பைக்கட்டாக தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல. விஜயின் தோற்றத்திற்கு பலவித கெட் அப்கள் அவருக்கு தோதாக இருக்கவில்லை. எப்போதாவது செய்த கண்ணுக்குள் நிலவு,சச்சின் போன்ற முயற்சிகளும் தோல்வியே. அதனால் தனக்கு ஏற்ற கதைகளையே தேர்வு செய்யத் தொடங்கினார். விஜயின் 50 படங்களை 5 வகையாக பிரிக்கலாம். தனக்கென ஒரு பாதை இல்லாது நடித்த ஆரம்பகால படங்கள். அவற்றை இப்போது அவரே விரும்பமாட்டார்.அதை விட்டுவிடலாம். அவரது 9வது படம்.பூவே உனக்காகஇரண்டாம் வகை. குடும்ப செண்டிமெண்டுகள் நிறைந்த காதல் கதைகளில் நடித்தார். பூவே உனக்காக, லவ்டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் என அந்த வகையில் அவர் அடித்த அடி இன்றும் முறியடிக்கப்படாத சதங்கள்.

அதன் பின் விஜய்க்கு இறங்குமுகம். போட்டியின்றி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு என்றென்றும் காதல், மின்சார கண்ணா, நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்விகள். அவ்வளவுதாம்ப்பா விஜய் என்றார்கள். இது நடந்த போதுதான் சேது, வாலி, அமர்க்களம் என விஜய்க்கு போட்டியாளர்கள் உருவாகி கொண்டிருந்தார்கள். தனது பாதையை சற்றே மாற்ற வேண்டுமென முடிவு செய்த விஜய் அடுத்து நடித்தது குஷி. மூன்றாம் வகை. உடைகள், நடனம், பாடி லேங்ஜுவேஜ் என சகலமும் மாற்றிக் கொண்டு வந்தார். அபாரமான ஒப்பனிங். அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என மேட்டுக்குடி படங்கள் வெளியான சமயத்தில்தான் குஷியும் வந்தது. சத்யமில் இதன் பரபரப்பான ஓப்பனிங் கண்ட அந்த திரையரங்க உரிமையாளர் சொன்ன வார்த்தை “இவன் நிஜமாவே அடுத்த ரஜினிதாம்ப்பா”. விஜய் பார்க்க சுமார் என்றவர்கள் கூட அவரின் உடையலங்காரம் குறித்து சிலாகித்தது இந்தக் காலக்கட்டத்தில்தான். இந்தியாவின் பல முன்னணி காஸ்ட்யும் டிசைனர் தமிழகத்தின் பெஸ்ட் டிரெசிங் சென்ஸ் உடையவர் விஜய்தான் என்றும் சொன்னார்கள். குஷியில் மீண்டும் வெற்றிக்கொடி ஏற்றியவர் தொடர்ந்து ப்ரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ், பத்ரி என பட்டயைக் கிளப்பினார்.

மீண்டும் ஒரு குழப்ப நிலை. யூத், பகவதி போன்ற சில படங்கள் வணிக ரீதியாக தப்பித்தாலும் ஷாஜஹான், தமிழன், வசீகரா, புதிய கீதை என தோல்விகள். வசீகராவில் அவரது நகைச்சுவை கலந்த நடிப்பு பின்னர் பாராட்டப்பட்டாலும் படம் வெளிவந்த போது அது தோல்வியே. நாயகியின் தங்கை காலில் விஜய் விழுவது போல இருந்த ஒரு காட்சி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை என்று எழுதியது ஒரு வாரப்பத்திரிக்கை. அஜித், விக்ரம் என்ற இரு போட்டிகள் அதற்குள் அவதாரமெடுத்து நிற்க, கூடவே நந்தா, மெளனம் பேசியது என பவுண்டரி அடித்த சூர்யா காக்க காக்க என்ற சிக்சரோட காத்திருந்தார். 2003 தீபாவளிதான் நிஜமான பரீட்சையாக இருந்தது விஜய்க்கு. வில்லன் என்ற வெற்றியை தொடர்ந்து அஜித் போலிஸாக நடித்த ஆஞ்சனேயா, வல்லரசில் விஜய்காந்தையே கலக்கலாக காட்டிய மகாராஜன் படம் ஒரு பக்கம். தூள்,சாமி என்று கமர்ஷியல் காக்டெயில் அடித்த விக்ரம் மீண்டும் பாலாவோடு பிதாமகன். உடன் சூர்யா. இவர்கள் ஒரு பக்கம். தொடர்தோல்விகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக கருதப்பட்ட விஜய், புதுமுக இயக்குனரோட ஒரு பக்கம். தமிழ் சினிமாவின் அன்றைய டாப் ஹீரோக்கள் நேரிடையாக மோதிய களம். திருமலை.. நான்காம் வகை.

படம் வந்தபோது நீங்கள் தமிழகத்தில் எந்த ஊரில் பார்த்திருந்தாலும் நினைவிருக்கும். விஜயின் மாஸ் முன்னால் எதுவும் எடுபடாமல் போனது. பிதாமகன் தேசிய விருது பெற்றாலும் மக்களின் அமோக ஆதரவு திருமலைக்கே. தொடர் தோல்விகளால் துவண்ட ரசிகர்களுக்கு தனது புது அவதாரத்தின் மூலம் க்ளுக்கோஸ் பாய்ச்சினார் தளபதி. திருமலையில் வசனம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதில் புகழ் பெற்ற ஒரு வசனம்

“இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”

விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்தன ஒவ்வொரு வசனமும்.

“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்”

சொன்னதை செய்தார் விஜய். திருமலை வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். இன்றுவரை கமர்ஷியல் படங்களுக்கு இலக்கணமாக திகழும் படம். திருமலை, கில்லி,திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என டாப்கியரில் போய்க் கொண்டிருந்தார் தளபதி. இங்க விழுந்து ஆகணுமே என்று எதிர்பார்த்தது போல் ஆனது. குருவி, வில்லு என தனக்கு மெகாஹிட் தந்த இயக்குனர்களை நம்பி தோல்வியைத் தந்தார். வேட்டைக்காரன் சற்றே பிக்கப் ஆனாலும் சுறா வந்து சுத்தமாக சூறையாடியது. இதோ மீண்டும் ஒரு மந்த நிலையில் உள்ளார் தளபதி. மீண்டும் பாதையை மாற்ற வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

அடுத்து ஹீரோயிச பில்டப் இல்லாத பாடிகார்டில் நடித்துக் கொண்டிருக்கிறார். குடும்ப படங்களுக்கு பெயர் போன ஜெயம் ராஜாவுடன் கைகோர்க்கவிருக்கிறார். 3 இடியட்ஸில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது. இயக்குனர் யார் என்ற யூகப்போர்தான் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் தனது புதுப்பாதை மூலம் அவர் வெற்றிக்கொடி நாட்டப்போவது நிச்சயம். இந்த தோல்விகள் எல்லாம் விஜய்க்கு புதிதல்ல. படத்தின் முடிவு என்னவென்றாலும் ரசிகர்கள் எண்ணிக்கை அவருக்கு என்றுமே குறைந்ததில்லை. பெரும் வெற்றி எனப்படும் சிங்கத்தின் முதல் வார சென்னை வசூல் 75 லட்சம். படுதோல்வி எனப்படும் சுறாவின் வசூல் 73 லட்சம். விஜய் டிவி தமிழகமெங்கும் நடத்திய அக்ருத்துக் கணிப்பில் அபார முன்னிலையில் Most Popular hero ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுதான் விஜய்.

இந்த வருடம் சிறப்பாய் மலர வாழ்த்துகிறோம் விஜய்

No comments:

Post a Comment

Popular Posts