Pages

Sunday, January 23, 2011

நடிகர் விஜய்க்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குரல்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். முத்துக்கண்ணன், செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,


’’நடிகர் விஜய் நடித்து, சக்தி சிதம்பரத்தின் சினிமா பேரடைஸ் நிறுவனம் சார்பில், ரோமேஸ்பாபு தயாரித்து பொங்கலுக்கு வெளிவந்துள்ள காவலன் திரைப்படத்திற்கு தமிழகமெங்கும் தடைகளை ஏற்படுத்தும் திமுக அரசுக்கு டி.ஒய்.எப்.ஐ கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.


பல ஆண்டுகாலமாக தமிழ் திரையுலகில் உள்ள பல பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் கூட இன்று தாங்கள் தயாரிக்கும் படத்தை கலைஞர் குடும்பத்திற்கு விற்றால்தான் வெளியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் மட்டுமல்லாது தொலைக்காட்சிகளும் கலைஞர் குடும்பத்தாரிடமே உள்ளதால், இவர்களை பகைத்து கொள்ள இயலாத பல தயாரிப்பு நிறுவனங்கள் இன்று திரையுலகை விட்டே வெளியேறி விட்டனர்.

ஆதிக்கம் செலுத்தும் மூன்று தயாரிப்பாளர்களும் முதல்வரின் பேரன்கள்.

ஒரு பேரன் துணை முதல்வரின் மகன், மற்றொரு பேரன் மத்திய அமைச்சரின் மகன், இன்னொரு பேரனும் மத்திய அமைச்சரின் சகோதரராக உள்ளதால், ஆட்சி அதிகாரம் முழுவதையும் திரைத்துறையில் தங்களுக்கு அடிபணியாதவர்களை பழிவாங்கவே பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் திரையுலகின் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு பல தடைகளை ஏற்படுத்தியவர்கள், பொங்கலுக்கு படம் வெளிவந்த பின்பு திரையரங்குகளில் நேரடியாக ரசிகர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவது அன்றாடச் செய்தியாக பத்திரிகையில் வருகின்றன.

பல நகரங்களில் டி.ஒய்.எப்.ஐ தோழர்கள் நேரடியாக சென்று நியாயம் கேட்கையில் அல்லது போராட்டம் நடத்துகையில் மிரட்டும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. காட்சிகளை ரத்து செய்வது, போஸ்டர், பேனர்களை கிழிப்பது, ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பவையெல்லாம் பாசிச அடக்குமுறைகளை நினைவுபடுத்துகின்றன.


ஏற்கனவே பல தயாரிப்பாளர்களும், கலைஞர்களும் திரைமறைவில் பாதிக்கப்பட்ட நிலைமாறி இன்று நடிகர் விஜய் நேரடியாகவே மிரட்டப்பட்டுள்ளார். இந்நிலை தொடருமோ என அச்சம் திரையுலகில் பரவிவருகிறது.

தமிழக முதல்வர் குடும்பத்தின் ஏகபோக திரைத்துறை ஆதிக்கத்திலிருந்து தமிழ் திரையுலகின் படைப்பு சுதந்திரத்தையும், தொழில் சுதந்திரத்தையும் மீட்டெடுக்க குரல் எழுப்ப வேண்டுமென தமிழக மக்களையும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத்து அழைக்கிறது’’என்று தெரிவித்துள்ளனர்.

source

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47180

No comments:

Post a Comment